தூத்துக்குடி,செப்.19: தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி நியூசுந்தரம் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன் (62). இவர், தூத்துக்குடியில் ஒரு தனியார் அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.
மாலைஅவர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 5 அரை பவுன் நகைகள் மற்றும் 16,500 ரூபாய் ஆகியவற்றை யாரோ மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார். சந்திரசேகரன் வேலை சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.