ஆறுமுகநேரி, செப்.19: ஆறுமுகநேரியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வெட்டிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். 3 பேரை தேடி வருகின்றனர். ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் கோவிந்தசாமி(28). இவர் கேரளாவில் சிப்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் ஆறுமுகநேரியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்தியுள்ளார். தற்போது கேரளாவில் சீசன் இல்லாததால் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 15ம்தேதி மாலை 6 மணியளவில் காமராஜர்புரம் காளிபறை அருகே அவரது உறவினர் முத்துராஜ்(20) என்பவருக்கு கிரக பிரவேசத்தற்கு அழைப்பிதழ் கொடுக்காதது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு 5பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாள் மற்றும் கம்புடன் கோவிந்தசாமி வீட்டிற்கு சென்று அவரை அரிவாளை கொண்டு வெட்டியுள்ளனர். இதனை தடுத்த அவரது அண்ணன் வெங்கடசாமி(30), அக்கா விஜயா(40), அவரது மருமகன் செல்லத்துரை(28) ஆகியோருக்கு தலை மற்றும் கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.