ஓட்டப்பிடாரம், செப்.19: ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகளாகியும் இ சேவை மையம் திறக்கப்படாததால் ரூ.27.40 லட்சம் வீணாகுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2013-14ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.27.40 லட்சத்தில் வட்டார அளவிலான இ சேவை மையம் கட்டப்பட்டது. கட்டி முடித்து 5 ஆண்டுகளை கடந்தும் இன்னும் மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது மகளிர் திட்டப் பணியாளர்கள் திறந்து வைத்திருந்தாலும் அலுவலகம் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் ஓட்டப்பிடாரம் யூனியனில் உள்ள 56 ஊராட்சிகளின் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களால் செயல்படுத்தப்பட்டு வரும் பொது இ சேவை மையங்கள் சரிவர இயங்குகிறதா என்பதனை இங்கிருந்து கண்காணிக்க இயலவில்லை. தமிழக அரசால் பொதுமக்களின் அலைச்சலை குறைக்கும் நோக்கிலேயே அவர்களின் இருப்பிடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம், யூனியன் அலுவலம் ஆகியவற்றின் மூலம் பெறக்கூடிய அனைத்து சான்றிதழ்களுக்கும் இங்கிருந்து விண்ணப்பித்து மிக எளிதாக பெறும்படியான வசதியாக மின் ஆளுமை திட்டத்தின் மூலம் இந்த இ சேவை மைய்யங்கள் கட்டப்பட்டு அதற்கான பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர்.