விழுப்புரம், செப். 19: தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு உள், வெளிமாநில பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய தோட்டக்கலை இயக்கம் 2018-19ம் ஆண்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உள் மாநில மற்றும் வெளி மாநில பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் அறிந்துகொள்ளும் வகையிலும், புதிய வீரிய ஒட்டு ரகங்கள் சாகுபடி முறைகள் பசுமைக்குடில் சாகுபடி மற்றும் இதர தொழில்நுட்பங்களை விவசாயிகள் பார்வையிட்டு வந்து தங்களது நிலத்தில் அவற்றை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாயிகளுக்கு இத்தகைய பயிற்சி அளிக்கப்படுகிறது.
தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகளிடம் நேரடியாக உரையாடி தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் இத்திட்டத்தில் வாய்ப்புள்ளது. 2018-19ம் ஆண்டு திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 150 விவசாயிகளுக்கு மாநிலத்திற்குள்ளும், 125 விவசாயிகளுக்கு வெளி மாநிலத்திலும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் 130 விவசாயிகளுக்கு வெளி மாநிலத்தில் கண்டனூர் சுற்றுலா ஆகியவை வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஒரு ஹெக்டருக்கும் குறையாமல் தோட்டக்கலைப்பயிற்சி சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.