சப்- இன்ஸ்பெக்டர் இடமாற்றத்தை கண்டித்து பேனர்

வில்லியனூர், செப். 19:  புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென காவல்துறை இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 16 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை அலுவலக கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்நிலையில் வில்லியனூர் வட்ட காவல் சரகத்துக்குட்பட்ட மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் அதிரடியாக ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இத்தகவலை அறிந்த பொதுமக்கள் சப்- இன்ஸ்பெக்டர கதிரேசனை மாற்றக்கூடாது என்று பேனர் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பேனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதில் மாற்றாதே, மாற்றாதே எஸ்ஐ கதிரேசனை மாற்றாதே எனவும், மங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த குற்றங்களை குறைத்து பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை பெற்றவர். நேர்மையாகவும், உண்மையாகவும், மக்களுக்கு உழைக்கும் அதிகாரி. இவரது இடமாற்றம் குற்றவாளிகளுக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். எனவே இவரது இடமாற்றம் ஆணையை திரும்பபெற வேண்டும். என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. இந்த பேனரை பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: