திருத்தணி, செப். 19: திருத்தணி ஆறுமுக சாமி கோவில் தெருவில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் காய்ச்சல், இருமல், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.இதேபோல் விபத்தில் சிக்குபவர்கள், விஷம் அருந்துபவர்கள், தொடர் காய்ச்சல், டெங்கு போன்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கண், வயிறு சம்பந்தப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் மற்றும் பிரசவத்திற்காக கர்ப்பிணிகள் இந்த மருத்துவமனைக்கு வருகின்றனர். இதனால் நாள்தோறும் மருத்துவமனைக்கு பைக், ஆட்டோ, வேன் மூலம் வருகின்றனர்.
தற்போது பொதுப்பணித் துறையால் மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் மருத்துவமனை முன்பு சரியாக தரைதளம் அமைக்காததால் மேடுபள்ளங்கள் ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை நீர் மருத்துவமனை நுழைவு வாயிலில் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துவருகிறது. இது கடிப்பதால் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு புதிய நோய் வருகிறது. பொதுப்பணித்துறை அலட்சியத்தால் இதுபோல் அந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி புதுப்புது நோயாளிகளை உருவாக்கி வருவதாக நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர். எனவே உடனடியாக மாவட்ட கலெக்டர் மருத்துவமனையை சுற்றிலும் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிடவேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.