புதுச்சேரி, செப். 19: புதுவை, கோவிந்தசாலை, குபேர் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் (27). பால் வியாபாரியான இவர் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் தனது மாடுகளை வீட்டின் முன்பு கட்டிவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலை பார்த்தபோது அதில் ஒரு மாடு காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தான் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்பும் இடங்களில் தேடி அலைந்தும் மாடுகளை காணவில்லை. இதனிடையே அந்த மாட்டை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஓட்டிச் சென்றதாக பிரபாகரனுக்கு தகவல் கிடைக்கவே அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து ஒதியஞ்சாலை போலீசில் பிரபாகரன் புகார் அளித்தார். வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையிலான போலீசார், சந்தேகத்தின்பேரில் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்ற பெருமாள், வாணரப்பேட்டை கார்த்தி உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.