புதுச்சேரி, செப். 19: புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்தாண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது. இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில், இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று காவலர் பணிக்கான வயது வரம்பு 22ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டது. இதையடுத்து 24 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் கடந்த ஜூன் 10ம் தேதி தொடங்கி ஜூலை 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. குறைந்தபட்ச கல்வித்தகுதி 12ம் வகுப்பு என்று அறிவிக்கப்பட்டாலும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி, பொறியியல் பட்டதாரிகளும் விண்ணப்பித்துள்ளனர். உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.