பெரும்புதூர், செப்.19: மணிமங்கலம் மண் குவாரியில், 3 பைக்குகளில் வந்த 9 பேர், அங்கிருந்த சூபர்வைசரிடம் கத்திமுனையில் ₹2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, மாவூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (28). பெரும்புதூர் அருகே மணிமங்கலம் ஏரியில் இயங்கும் மண் குவாரியில் சூபர்வைசராக வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் மாலை லட்சுமணன், குவாரிக்கு வரும் லாரி டிரைவர்களிடம் பணம் வசூலித்து கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 9 பேர், கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து வந்து, லட்சுமணனை மிரட்டி அவர் வைத்திருந்த ₹2 லட்சத்தை கொள்ளையடித்தனர்.இதை பார்த்ததும், அங்கிருநத் சக ஊழியர்கள் கோபிநாத் (28), ரமேஷ் (27) ஆகியோர், மர்மநபர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், 3 பேரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.