பெரும்புதூர், செப். 19: குன்றத்தூரில் பழடைந்து இடியும் நிலையில் இருந்த வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம், பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று அகற்றப்பட்டது.குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சியில், கடந்த 1965ம் ஆண்டு முதல் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இந்த கட்டிடத்தின் மேற்கூரையில் சிமென்ட் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்தது. அதை முறையாக சீரமைக்காமலும், பராமரிக்காமலும் விட்டதால் நாளடைவில் இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலைக்கு மாறியது.இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக் அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, ₹1.49 கோடியில் 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி துவங்கியது. தொடர்ந்து, கட்டிடம் கட்டும் பணி முடிந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஆனால், பழைய வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடம் அகற்றாமல் அப்படியே கிடந்தது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், அந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், பாழடைந்த வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று, பாழடைந்த பழைய கட்டிடம் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.