×

குப்பைகளை பயன்படுத்தி நிரப்ப ரஷ்யா நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

நெய்வேலி, செப். 19: சென்னையின் பெருங்குடி போன்ற குப்பை கிடங்குகளில் உள்ள குப்பைகளை, அழுத்தி பிளாக்குகளாக செய்து, அதனை சுரங்கம் அகழ்ந்தெடுத்த பகுதிகளை மீண்டும் நிரப்ப பயன்படுத்தும் வகையில் ரஷ்ய நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு  பட்டிமன்றத்தின் தொடக்க விழாவில் என்எல்சி இந்தியா நிறுவன மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன் தெரிவித்தார். சிந்து சமவெளி நாகரிக காலத்திலிருந்து நமது நாட்டு மக்கள் நவீன கழிப்பறைகளை பயன்படுத்தியுள்ளனர் என்ற அவர், ஆனால் தற்போதுவரை திறந்த வெளியில் மலம் கழிப்பதை முற்றிலும் தவிர்க்க முடியவில்லை என்றார்.

நாட்டை தூய்மையாக வைத்திருப்பதில் கழிவறைகளின் பங்கை எடுத்துக்கூறிய அவர், இதற்காக என்எல்சி இந்தியா நிறுவனம் தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள பள்ளிகளில், ஆயிரக்கணக்கான கழிவறைகள் கட்டித்தந்திருப்பதை எடுத்துக் கூறினார். தற்போது, தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள ரயில் நிலையங்களில் கழிப்பறைகள் கட்டிவருகிறது. மேலும், நெய்வேலிக்கு அருகில் உள்ள கொள்ளிருப்பு, பள்ளிநீரோடை மற்றும் கோரணாம்பட்டு ஆகிய கிராமங்களைத் தத்தெடுத்து, அங்கு கழிவறைகளை கட்டித்தந்து, பொதுமக்களிடையே திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை தடுத்துள்ளது என கூறினார்.  நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவன கற்றல் மற்றும் மேம்பாட்டுத்துறை தலைமை பொதுமேலாளர் சண்முகசுந்தரம், கல்லூரியின் செயலர் அப்துல் காதர், ஜவகர் கல்லூரி முதல்வர் சந்திரசேகர், டாக்டர் செந்தாமரைக்கண்ணன், சாந்தி ஜெயராமன், தமிழரசி செந்தில்குமார், அருணன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Russia ,
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...