அரசு மருத்துவமனையில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பை துல்லியமாக கண்டறியும் கருவி

மதுரை, செப். 17: நுரையீரல் புற்றுநோயை துல்லியமாக கண்டறிய நவீன கருவி மதுரை அரசு மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. நுரையீரல் புற்று நோயை துல்லியமாக கண்டறிய `கிரையோ பயாப்ஸி’ எனப்படும் திசு பரிசோதனை மேற்ெகாள்ளப்படுகிறது. இப்பரிசோதனைக்கான `பிரான்ங்கோஸ்கோபி’ என்ற, ரூ.20 லட்சம் மதிப்புள்ள நவீன கருவி. மதுரை அரசு மருத்துவமனை, நுரையீரல் சிகிச்சை பிரிவில்(162வது வார்டு) நிறுவப்பட்டுள்ளது.  இக்கருவியின் இயக்கத்தை நேற்று மருத்துவமனை டீன் வனிதா துவக்கி வைத்து கூறும்போது, ``சுவாசக்குழாய் உள் நோக்கும் கருவி’(பிரான்ங்கோஸ்கோபி) மூலம், -5லிருந்து -14 சென்டிகிரேட் வரையிலான குறைந்த குளிர்ச்சியை உண்டாக்கி, `கிரையோ பயாப்ஸி’ பரிசோதனை செய்யப்படுகிறது. இதன்மூலம் கார்பன் டை ஆக்ஸைடு வாயுவின் உதவியால் மிகக்குறைந்த குளிர் நிலையை, திசு பரிசோதனை செய்யும் மெல்லிய குழாயின் முனையில் உருவாக்கி, அதனை சுவாசக்குழாயில் உருவாகியுள்ள திசுக்கட்டியின் மேல் தொட்டு, அதனையும் 0.5 முதல் 1 செ.மீ அளவிலான பனிக்கட்டியாக குளிரச்செய்து, பரிசோதனைக்கு திசு எடுக்கப்படுகிறது. சாதாரண பாயாப்சி முறையில் நுரையீரல் கட்டி எந்த வகையானது என்பது 75 சதவீதம் மட்டுமே கணிக்க முடியும். இதனால் 2வது முறையாக மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது.

ஆனால் ‘கிரையோ பயாப்சி’ முறையில் என்ன வகையான புற்றுநோய் என்பதை 97 சதவீதம் கணிக்க முடிகிறது.  இதனால் நோயாளியின் சிரமம் குறைகிறது. இந்த கிரையோ பயாப்ஸி பரிசோதனைக்கான கருவி, தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் மதுரை மாவட்ட கலெக்டரின் தன்னிறைவு திட்டத்தின் மூலம் வாங்கப்பட்டு, தமிழகத்திலேயே முதன்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில்தான், இப்பரிசோதனை செய்யப்படுகிறது’’ என்றார். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சங்குமணி, துறைத்தலைவர் பிரபாகரன் உடனிருந்தனர்.

Related Stories: