ஆலந்தூர், செப்.17: ஆதம்பாக்கம் நிலமங்கை நகரில் ₹25.50 கோடியில் கூடுதல் கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது. சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் 12வது மண்டலத்துக்கு உட்பட்ட ஆதம்பாக்கம், நிலமங்கை நகரில் பாதாள சாக்கடை கழிவுநீர் உந்துநிலையம் இயங்கி வருகிறது. இங்கு சேகரிக்கப்படும் திடக்கழிவுகள் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த உந்துநிலையத்தில் போதுமான கொள்ளளவு இல்லாததால், கூடுதல் உந்துநிலையம் அமைக்கக் கோரி, ஆலந்தூர் திமுக எம்எல்ஏ தா.மோ.அன்பரசனிடம் அப்பகுதி நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், நிலமங்கை நகரில் கூடுதல் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்க தமிழக அரசு, மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின்கீழ், ₹25.50 கோடி மதிப்பீட்டில், 10 எம்எல்டி கொள்ளளவு கொண்ட கூடுதல் கழிவுநீர் உந்துநிலையத்துக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது.