மின்சார வயர் பதிப்பில் அலட்சியம் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பரிதாப பலி

* முகலிவாக்கத்தில் சோக சம்பவம்

* 2 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

குன்றத்தூர், செப். 17: போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்ற பள்ளி மாணவன், மின்வாரிய அலுவலகம் சார்பில் சரிவர பாதிக்கப்படாமல் இருந்த மின் வயரில் மிதித்தபோது, மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதனை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போரூர் அடுத்த முகலிவாக்கம், சுப நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் தீனா (14). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.தனம் நகரில் உள்ள தெருவில் கடந்த சில  தினங்களுக்கு முன் மின்வாரிய அலுவலகம் சார்பில் சாலையில் மின்வயர்கள்  பதிக்கும் பணி நடந்தது. ஆனால், அந்த பள்ளங்கள் சரிவர மூடவில்லை என  கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையில், மின்வயர்கள் அனைத்தும் வெளியில் தெரியும்படி கிடந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தீனா, தனது வீட்டின் அருகே உள்ள நண்பனை பார்க்க சென்றான். பின் வீட்டுக்கு புறப்பட்டான். தனம் நகர் வழியாக நடந்து சென்றபோது, சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் கால் வைத்தான். அப்போது, அங்கு வெளியில் தெரிந்த அதிக அழுத்தம் கொண்ட மின்சாரம், சிறுவன் தீனா மீது பாய்ந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்ட தீனா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். அவனது அலறல் சத்தம் கேட்டு, அங்கு ஓடிவந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர், சடலத்தை மீட்டு, கையில் ஏந்தியபடி சிறுவனின் சாவுக்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என கூறி, மவுண்ட் பூந்தமல்லி செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு, போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.தகவலறிந்து மாங்காடு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். அப்போது, விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.இதைதொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையில், விபத்துக்கு காரணமான சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் செந்தில், உதவி மண்டல பொறியாளர் பாலு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Related Stories: