கிருஷ்ணகிரி, செப்.17: அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலத்தில், நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், காவேரிப்பட்டணம் பொதுமக்கள் கலெக்டர் பிரபாகரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைத்து பஞ்சாயத்துகளிலும் கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. சில ரேஷன் கடைகளில் இருப்பு வைத்துகொண்டே பொருட்கள் இல்லை என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும், எடை குறைவாக பொருட்கள் வழங்குவதால், பொதுமக்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. இதனை தவிர்க்கவும், கடைகளில் உள்ள பொருட்களை பாதுகாக்கவும், அனைத்து ரேஷன் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மேலும், ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக உள்ள டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முறைகேடுகளும், கொள்ளை சம்பவங்களும் நடப்பதை தடுக்க, டாஸ்மாக் கடைகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.