ஊட்டி, செப். 17: கோத்தகிரி சக்திமலை சாலை பகுதியில் டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். கோத்தகிரி சக்திமலை சாலை பகுதி மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, அவர்கள் அப்பகுதியில் டாஸ்மாக் கடை புதிதாக திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கோத்தகிரி சக்திமலை சாலையில் உள்ள ரேஷன் கடை அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. அப்பகுதியில் சுமார் 150 குடியிருப்புகள், தனியார் மழலையர் பள்ளி, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பாலிடெக்னிக் கல்லூரி, உதவி தொடக்க கல்வி அலுவலகம், நான்கு தேவாலயங்கள், முருகன் கோயில், மின்சார வாரிய அலுவலகம், வணிக நிறுவனங்கள் உள்ளன.
இப்பகுதியில் மதுக்கடை திறந்தால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பாதிப்பார்கள். மேலும், பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தேவாலயம் மற்றும் கோயில்களுக்கு வரும் பக்தர்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது. மேலும், தற்போது டாஸ்மாக் கடை துவக்க திட்டமிட்டுள்ள பகுதிக்கு அருகே 100 மீட்டர் தூரத்தில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இந்நிலையில், மேலும் ஒரு டாஸ்மாக் கடை வரும்பட்சத்தில் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்கள். எனவே, இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டாம், என மனுவில் சக்திமலை சாலை பகுதி மக்கள் கூறியுள்ளனர்.