ஊட்டி, செப். 17: ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த டீ கடையை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். ஊட்டி மத்திய பஸ் நிலையம் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்யும் பணி துவக்க விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு, மறு சுழற்சி செய்யும் இயந்திரத்தின் செயல்பாட்டினை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மத்திய பஸ் நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு ஆவின் டீ கடைக்கு சென்றார். அங்கு, கடையை சுற்றிலும் கழிவு நீர், குப்பைகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கலெக்டர் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து, சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். அப்போது, அந்த கடை உரிமையாளர் நாங்கள் குப்பை போடவில்லை. போக்குவரத்து கழகத்தினர் குப்பைகளை போட்டுள்ளனர் என கூறினார். இதில், மேலும் ஆத்திரமடைந்த கலெக்டர் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலரை அழைத்து சம்பந்தப்பட்ட கடைக்கு அபராதம் விதித்து, டீக்கடையை அகற்ற உத்தரவிட்டார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.