கோவை, செப். 17: தமிழகத்தில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்ற அறிவிப்பு மற்றும் இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை நடத்த உள்ளது என கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்திய வழகறிஞர் ஈசன், சண்முகம், முத்துவிஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மார்க்சிஸ்ட் கம்யூ மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கோவை மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இதையடுத்து,பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு 30க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் பவர்கிரிட் நிறுவனத்தின் மூலம் மின்கோபுரம் அமைக்க முயற்சித்து வருகிறது. விவசாயிகள் அனுமதியின்றி அவர்களின் நிலத்தில் புகுந்து அளவீடு செய்கிறது. இதை எதிர்த்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்காரணமாக பல்வேறு வழக்குகள் விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ளது. பெண்கள், முதியவர்கள் என்பதைக்கூட பார்க்காமல் காவல்துறையினரை கொண்டு நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது.