நகரில் 3வது நாளாக பலத்த மழை

கோவை, செப். 17:  கோவை மாநகரில் மூன்றாவது நாளாக பெய்த கன மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் மாநகர பகுதிகளான உக்கடம், டவுன்ஹால், குனியமுத்தூர், சாய்பாபாகோயில், கவுண்டம்பாளையம், வடவள்ளி, பீளமேடு, சிங்காநல்லூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

சுமார், அரை மணி நேரத்திற்கு மேல் நீடித்த மழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. வடகோவை மேம்பாலம், அவினாசி மேம்பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீர் மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மழையினால், திருச்சி சாலை, அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மாநகரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: