×

முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையோர பள்ளத்தில் தேங்கி நிற்கும் மழைநீரால் விபத்து அவலம்

முத்துப்பேட்டை, செப்.17: முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையோர பள்ளத்தில்தேங்கி நிற்கும் மழைநீரால் விபத்து ஏற்படும் அவலம் உள்ளது. முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு பேருந்து நிறுத்தம் கிழக்கு கடற்கரை சாலையோரம் இருபுறமும் பள்ளமான பகுதியாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழை பெய்யும்போது அதில் மழைநீர் தேங்கி விடுகிறது. அதேபோல் இப்பகுதியில் சாலையில் பெய்யும் மழைநீர் வடிய வாய்க்கால் இல்லாததால் தொடர்ச்சியாக மழை பெய்யும் நேரத்தில் சாலையில் ஆறு போன்று தண்ணீர் தேங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் மழை விட்டபிறகு அந்த பள்ளத்தில் தேங்கும் தண்ணீர் பல நாட்கள் கிடந்து அசுத்தமாகி விடுவதுடன் அப்பகுதியில் செல்பவர்கள் வழுக்கி விழும் சூழல் ஏற்படுகிறது.

அப்பகுதியை பேருந்து நிறுத்தமாக மக்கள் பயன்படுத்தி வருவதால் தினந்தோறும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் இங்கு வந்து பேருந்துகள் ஏறும்போது இடையூறாக உள்ளது. மேலும் அப்பகுதியை கடக்கும் வாகனங்கள் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட்டு செல்லும் நேரத்தில்வழுக்கி நிலைதடுமாறி விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல் நடந்து செல்லும் மக்களும் அடிக்கடி சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் நலன் கருதி பள்ளமாக உள்ள இந்த பகுதியை தரைமட்டத்தை உயர்த்தி சாலையை சீரமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Tags : Accident ,Sembadawankadu ,Muthupet ,road ditch ,
× RELATED முத்துப்பேட்டை அருகே கலைத்திருவிழா...