சமையல் செய்தபோது தீவிபத்து உடல் கருகிய கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி சாவு

ஒரத்தநாடு, செப். 17: ஒரத்தநாடு அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் உடல் கருகிய கர்ப்பிணி, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் தவில் வித்வான் பாலாஜி. இவரது மனைவி அருள்மொழி (25). இவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது அருள்மொழி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டுக்கு வெளியில் போடப்பட்டிருந்த சமையல் கொட்டகையில் அருள்மொழி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது அருள்மொழி அணிந்திருந்த நைட்டியில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து கூச்சலிட்டவாறு சமையல் கொட்டகையிலிருந்து வீட்டுக்குள் அருள்மொழி ஓடினார். தீ மேலும் பரவி அருள்மொழி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளே ஆனதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: