×

நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற தயக்கம் காட்டும் மாநகராட்சி அலுவலர்கள்

தஞ்சை, செப். 17: நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் வகையில் தஞ்சை ராணி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற தஞ்சை மாநகராட்சி அலுவலர்கள் தயங்குவதாக சிஐடியூ குற்றம் சாட்டியுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு அளித்த மனு: தஞ்சை மாநகரம் புதுப்பட்டினம் கிராம வருவாய் கிராம நிர்வாகத்துக்கு உட்பட்ட மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள காந்திஜி சாலை அருகே 40 அடி அகலமுள்ள ராணி வாய்க்கால் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதன் தலைப்பு பகுதி வர்த்தக நிறுவனங்களின் நலன்களுக்காக முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவுநீர் செல்லும் சாக்கடையாக மாறிவிட்டது. எங்களது போராட்ட அறிவிப்பின் காரணமாக 29.11.2012 அன்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இதுவரை அமல்படுத்தவில்லை. அக்கூட்டத்தில் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள ராணி வாய்க்காலின் ஆக்கிரமிப்புகளை நகரமைப்பு அலுவலர் ஆய்வு செய்து ஒரு வாரத்துக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், புதுஆற்றின் தலைப்பு பகுதியிலிருந்து வாய்க்காலில் நீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுவரை இந்த முடிவு எதுவும் அமல்படுத்தவில்லை. ஆக்கிரமிப்பில் உள்ள வணிக நிறுவனங்களின் பெரும்பாலானவை அரசியல் கட்சி பிரமுகர்களின் பினாமி நிறுவனங்களாக உள்ளதால் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் வெளிப்படையாக தயக்கம் தெரிவிக்கின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வித சமரசமுமின்றி அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவு இருக்கும்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் தயக்கம் காட்டுவது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். எனவே தஞ்சை கலெக்டர், நீதிமன்ற உத்தரவுகளை கவனத்தில் கொண்டு ராணிவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சன்யமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கல்லறை தோட்டத்துக்கு நிலம் ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைந்த கிறிஸ்தவ போதகர்கள் கூட்டமைப்பு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், தஞ்சையில் 80க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ திருச்சபைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர்.

இச்சபைகளுக்கு என்று இதுவரை பொதுவான கல்லறை தோட்டம் இல்லை. இதனால் மரித்தவர்களை அடக்கம் செய்ய பெரிய அவஸ்தை, இன்னல், மன உளைச்சல் அடைகிறோம். எனவே தஞ்சை வட்டத்துக்குள் கல்லறை தோட்டத்துக்கு என நிலம் ஒதுக்கீடு செய்து எங்களது துயர் துடைக்க வேண்டுகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நகை கடன் திட்டம் தொடர நடவடிக்கை: காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் அம்மையகரம் ரவிச்சந்தர் அளித்த மனுவில், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள் விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் நகைக்கடன் வழங்கி வந்தன.
விவசாயி கடனில் பிறந்து, கடனில் வாழ்ந்து, கடனில் சாகிறான். எந்த ஒரு அவசர தேவைக்கும் கல்வி செலவு, மருத்துவ செலவு, திருமண செலவு, இறப்பு செலவும் எதுவானாலும் அறுவடை வரை காத்திருக்க முடியாத நிலை இருப்பதால் நகை கடன் வாங்கி தான் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் வணிக வங்கிகளில் நகை ஈடாக எந்த சான்றும் இல்லாமல் அதற்குரிய தொகையை 7 சதவீத வட்டியுடன் வழங்கி வந்தனர். கடன் அடைக்கப்பட்ட பிறகு 3 சதவீத வட்டி மானியமாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் 4 சதவீத வட்டியில் நகை கடன் கிடைத்ததால் விவசாய கூலி தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் 1.10.2019 முதல் இந்த நகை கடன் திட்டம் நிறுத்தப்படுமென மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளதாக செய்தி வருகிறது. ஆனால் விவசாயிகளுக்கு பெரிதும் பயன் அளித்து வந்த நகை கடன் திட்டம் தொடர மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Queen ,
× RELATED மன்னர் சார்லசை தொடர்ந்து இங்கிலாந்து இளவரசிக்கும் புற்றுநோய்