ஏரல், செப். 17: திருவழுதிநாடார்விளை முத்துமாலை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று தரிசித்தனர். ஏரல் அருகே திருவழுதிநாடார்விளையில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாலை அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. இதை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் ஊர்வலமாக பக்தர்களால் எடுத்துவரப்பட்டது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பூஜைகளை தொடர்ந்து கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து முத்துமாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. இதில் ஊர் மக்கள் திரளாகப் பங்கேற்று அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.