கீரிப்பாறை அருகே பரிதாபம் சுற்றுலா வேன் கவிழ்ந்து சாத்தான்குளம் முதியவர் பலி

பூதப்பாண்டி, செப். 17: கீரிப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சாத்தான்குளம் முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் எபிராகிம் (50). இவரது தலைமையில் 5 ஆண்கள், 13 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 22 பேர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு வேனில் சுற்றுலா வந்தனர். வேனை அந்தோணி செபஸ்தியான் ஓட்டினார். இவர்கள் கீரிப்பாறை அருகேயுள்ள காளிகேசம் பகுதிக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். தற்போது மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் காளிகேசத்துக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்ைல. இதையடுத்து கீரிப்பாறை அருகே பால்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதியில் தண்ணீர் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு குளிக்க சென்றனர். மாலை அப்பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பிவந்தபோது எதிர்பாராதவிதமாக பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.

 இதில் எபிராகிம் வேனில் இருந்து தூக்கி வீசப்பட்டார். கீழே விழுந்த அவர் மீது வேன் கவிழ்ந்தது. இதில் உடல் நசுங்கிய எபிராகிம் சம்பவ இடத்திலேயே இழந்தார். இந்த சம்பவத்தில் வேனில் இருந்தவர்கள் காயமடைந்தனர். அருகில் உள்ளவர்கள் சென்று காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் ஜோஸ்வா என்ற 4 வயது குழந்தை உள்பட 9 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: