திருவண்ணாமலை, செப்.17: போளூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பெண் சாராய வியாபாரியை ேநற்று போலீசார் கைது செய்தனர்.போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தில் கவுரி என்பவர் சாராய விற்பனை செய்து வந்தார். இதனால் அந்த பகுதியில் உள்ள கூலித்தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இது குறித்து போலீசாருக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போளூர் சேத்துப்பட்டு சாலையில் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த போளூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் க.விநாயகம், அ.ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் சாராய வியாபாரியை கைது செய்யும் வரை மறியலை கை விடமாட்டோம் என கூறினர். அதனை தொடர்ந்து போலீசார் கவுரியை கைது செய்தனர். பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.