நெல்லையில் தேசிய மக்கள் நீதிமன்றம் 2,959 வழக்குகளில் ரூ.6.51 கோடி வழங்க தீர்வு

நெல்லை, செப். 15: நெல்லையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 959 வழக்குகளில் ரூ.6.51 கோடி தீர்வு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 3வது தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தலைமையில் நடந்தது. மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் அருள்முருகன், விஜயகாந்த், சந்திரா, இந்திராணி, தலைமை குற்றவியல் நீதிபதி ரவிக்குமார், சட்ட உதவி மைய நீதிபதி வஷித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 9 அமர்வுகளும், தாலுகா நீதிமன்றங்களில் 16 அமர்வுகளும் என மொத்தம் 25 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மக்கள் நீதிமன்றத்தில் 5,517 நிலுவையில் உள்ள வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 2, 814 வழக்குகளில் மொத்தம் ரூ.5 கோடியே 13 லட்சத்து 1480 இழப்பீட்டுத் தொகை வழங்க தீர்வு காணப்பட்டது. மேலும் 175 வங்கி வராக்கடன் வழக்குகளில் 135 வழக்குகளில் ரூ.1 கோடியே 38 லட்சத்து 72 ஆயிரத்து 447 வழங்க தீர்வு காணப்பட்டது.  இவ்வாறாக மொத்தம் 2,959 வழக்குகளில் ரூ.6 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 927 வழங்க தீர்வு காணப்பட்டது. ஏற்பாடுகளை மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, சட்ட உதவி மன்ற நீதிபதி வஷித்குமார்  செய்திருந்தனர்.

Related Stories: