புதுக்கோட்டை, செப்.15: தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாவட்ட சங்க ஆலோசனை கூட்டம் நேற்று புதுக்கோட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் உத்தமன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநில சங்கத்தின் 75ம் ஆண்டு பவள விழா மாநாட்டிற்கு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் உள்ள காலிபணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் அலுவலக உதவியாளர்கள், அடிப்படை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட செயலாளர் சங்கர் வரவேற்றார். முடிவில் துணை செயலாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.