×

காரைக்காலில் மக்கள் நீதிமன்றம் 191 வழக்குகளுக்கு உடனடி தீர்வு

காரைக்கால், செப்.15: காரைக்காலில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 580 வழக்குகளில் 191 வழக்குகளுக்கு உடனே தீர்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் உத்தரவின்படி, காரைக்கால் மாவட்ட நீதிபதி கார்த்திகேயன் தலைமையில், காரைக்காலில் மக்கள் நீதிமன்ற முகாம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றும் சமாதானமாகக் கூடிய வழக்குகள், கணவன்- மனைவி தொடர்பான வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், வங்கிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற மொத்தம் 580 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

காரைக்கால் குடும்ப நல நீதிபதி சிவகடாட்சம், இந்திய தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜசேகரன் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர். முடிவில், எடுத்துகொள்ளப்பட்ட 580 வழக்குகளில் 191 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. ரூ.55 லட்சத்து 9 ஆயிரம் வசூல் செய்யப்பட்டதாக, மக்கள் நீதிமன்ற வக்கீல்கள் தெரிவித்தனர்.

Tags : Karaikal ,People's Court ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்