நாமக்கல், செப்.15: நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறை சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டது. சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணித் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், கண்காட்சி அமைக்கப்பட்டது. இதில், வண்ண பொடிகளால் கோலம் போடப்பட்டிருந்தது.
அதில் காய்கறிகள், பழங்கள், தானியம் மற்றும் மாமிசம் உள்ளிட்ட பல வகையான உணவு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், சக்தி தரும் உணவு, பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் வளர்ச்சி தரும் உணவு என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு வந்தவர்கள், இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு பணியில் இருந்த அங்கன்வாடி ஊழியர்கள் விளக்கம் அளித்தனர்.