கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரியில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கான பயிற்சியை டிஆர்ஓ துவக்கி வைத்தார். மத்திய அரசின் புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்க துறையால் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பொருளாதார கணக்கெடுப்பு செல்போன் செயலி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக களத்திற்கு சென்று தகவல்களை இணைய வழியாக சேகரித்து கணக்கெடுப்பு பணளியை மேற்கொண்டு வருகிறார்கள். முதல் முறையாக கணினி வழி இணையதள செயலிகளை கொண்டு கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் இதில் சேகரிக்கப்படும் விவரங்கள் துல்லியமாக இருக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 7வது பொருளாதார கணக்கெடுப்பு களப்பணியாளர்களுக்கான பயிற்சி நடந்தது. பயிற்சியை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு, குழுவின் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர், உறுப்பினர்களாக மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை தலைவர்களும் உள்ளனர். பயிற்சியை துவங்கி வைத்து வருவாய் அலுவலர் சாந்தி பேசுகையில், 7வது பொருளாதார கணக்கெடுப்பு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ள ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கணக்கெடுப்பு.
எனவே, பொதுமக்கள் கணக்கெடுப்புக்காக தங்களை நாடி வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு சரியான புள்ளி விவரங்களை கொடுத்து போதுமான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பயிற்சிக்கு புள்ளியியல் துறை இயக்குநர் குப்புசாமி தலைமை வகித்தார். தேசிய புள்ளியியல் நிறுவனம் முதுநிலை புள்ளியியல் அதிகாரி மதிவாணன் பயிற்சிகளை வழங்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பொதுசேவை மைய மாவட்ட மேலாளர் செபாஸ்டியன் செய்திருந்தார்.