தர்மபுரி, செப்.15: தர்மபுரி சிட்கோ தொழிற்பேட்டை, உங்காரனஅள்ளி ஆகிய இடங்களில் புதிய தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை கொள்கை முதலீட்டு மானியத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ், கடனுதவி பெற்று நடைபெற்று வரும் தொழிற்சாலைகளை, மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் அசோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் 2019-2020ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட ₹1.10 கோடி என்ற இலக்கில், இதுவரை 12 நபர்களுக்கு ₹1.39 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் 2018-2019ம் ஆண்டில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 21 நபர்களுக்கு ₹2.10 கோடி என்ற இலக்கில் 9 நபர்களுக்கு ₹40 லட்சம் மானியமும், 2019-20-ம் நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட 21 நபர்களுக்கு ₹2.10 கோடி என்ற இலக்கில் 9 நபர்களுக்கு ₹40 லட்சம் மானியம் என 54 நபர்களுக்கு ₹3.95 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
2019-2020ம் ஆண்டுக்கான புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில்நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தர்மபுரி என்ற முகவரியில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.