புதுக்கடை, செப். 15: திமுக வழக்கறிஞர் அணியின் மேற்கு மாவட்ட துணை அமைப்பாளர் சதீஷ்குமார் கூறியதாவது: தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் விற்பனையாகிறது. ஆனால் தற்போது ஒரு சிலரின் தவறான அணுகுமுறையால் தடை செய்யப்பட்ட வள மீன்கள் இந்த துறைமுகத்திற்கு கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். இந்த வள மீன்களால் சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. வள மீன்களை பிடிப்பதால் கடலில் உள்ள மீன்களுக்கு உணவு இல்லா நிலையும் ஏற்படும் .
ஏற்கனவே இந்த வள மீன்கள் இறக்கப்படுவதை கண்டித்து தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத் 3 முறை மறியல் போராட்டம் நடத்தியுள்ளது. அப்போது பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டது. தற்போது தேங்காப்பட்டணத்தில் மீனவர்கள்- முஸ்லிம்கள் மத்தியில் நல்ல உறவு மேம்பட்டுள்ள நிலையில் அதை சீர்குலைக்கும் வகையில் மீண்டும் இந்த வள மீன் கொண்டுவரப்படுகிறது .இந்த செயலுக்கு மீன்வளத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் உடந்தையாக உள்ளார் என்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதே நிலை தொடர்ந்தால் திமுக வழக்கறிஞர் அணி சார்பில் பொது மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.