திருப்புத்தூர், செப். 15: திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு உதவிபெறும் கல்லூரியில் அழகப்பா பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பெண்கள் கபடி போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியை கல்லூரி செயலர் ஆறுமுகராஜன் துவக்கி வைத்தார். இதில் திருப்புத்தூர், காரைக்குடி, ராமநாதபுரம், சருகணி, கீழக்கரை, தெக்கூர் உள்ளிட்ட 19 கல்லூரியைச்சேர்ந்த கபடிக் குழுவினர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டிக்கு ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியும், காரைக்குடி அழகப்பா உடற்கல்வி கல்லூரியும் தேர்வு பெற்றன.
இப்போட்டியில் காரைக்குடி உடற்கல்வி கல்லூரி வெற்றி பெற்று முதலிடத்தையும், திருப்புத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி 2ம் இடத்தையும் பிடித்தது. இரண்டு அணிகளுக்கும் பரிசாக கோப்பை வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இதில் பங்கு பெற்ற ஒட்டுமொத்த அணிகளின் சிறந்த விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கிடையேயான போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயவேல், வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.