மதுரை, செப்.15: மதுரை நாகமலையில் எல்ஐசி ஓய்வு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25பவுன் நகை ரூ.10ஆயிரத்து500 ரொக்கத்தை கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. காரில் காத்திருந்து கண்காணித்து அடுத்தடுத்து 3 வீடுகளில் நகை, பணத்தை கும்பல் கொள்ளையடித்ததும் தெரியவந்துள்ளது, மதுரை அருகே நாகமலை அன்னைதெரசா தெருவைச் சேர்ந்தவர் குமார்ராஜா(75). எல்ஐசி, ஓய்வு அதிகாரி. இவர் குடும்பத்துடன், மதுரை காளவாசலில் நடந்த திருமணத்திற்கு மாலை 6.30மணிக்கு காரில் கிளம்பி சென்று விட்டு, இரவு 9.30மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன், உள்கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. மேலும் பின்கதவும் உடைந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன. பீரோவை உடைத்து அதற்குள் இருந்த 25பவுன் தங்க நகைகள், ரூ.10ஆயிரத்து 500 ரொக்கத்தை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. தகவலறிந்து வந்த நாகமலை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வந்தனர்.