திருப்பூர்,செப்.15: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் திங்கள் முதல் செயல்படும் வாக்காளர் சேவை மையத்தை பயன்படுத்திக் கொண்டு பொதுமக்கள் தங்களது வாக்காளர் பதிவினை சரிபார்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவுப்படி வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்களை வாக்காளர் பட்டியலில் தாங்களாகவே சரிபார்த்து கொள்வதற்கு வாக்காளர் சரிபார்க்கும் திட்டம் 1ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்கீழ் தங்களது பெயர்களை www.nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter help line என்ற மொபைல் செயலி மூலமாகவும் சரிபார்ப்பதற்காக, வாக்காளர் சேவை மையம் நாளை(16ம்தேதி) முதல் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் வாக்காளர் சேவை மையத்தின் மூலமாக தங்களது வாக்காளர் பதிவினை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், பொது மக்கள் வாக்காளர் பதிவினை சரிபார்க்க தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை தவறாமல் எடுத்து வருமாறும், வாக்காளர் பெயரினை உறுதிபடுத்துவதற்காக ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இதே போன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சார் ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றிலும் வாக்காளர் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.