கோவை,செப்.15:கோவை மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்டம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடந்தது. கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மற்றும் பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் லோக் அதலாத் நேற்று நடத்தப்பட்டது. இதை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.சக்திவேல் துவக்கி வைத்தார்.
இதில், மாவட்டம் முழுவதும் உள்ள 24 நீதிமன்றங்களில் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், போக்குவரத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள் என 6659 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாாிக்கப்பட்டன. இதில் 2354 வழக்குகளுக்கு ரூ.5 கோடியே 11 லட்சத்து 95 ஆயிரத்து 472 ரூபாய்க்கு சமரச தீர்வு செய்யப்பட்டது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி ஸ்ரீராமலு மற்றும் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சூலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று நடந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் சூலூர் குற்றவியல் நீதிபதி வேடியப்பன் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ்மது தலைமையில் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சங்க தலைவர் சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.