ஈரோடு, செப். 15: ஈரோட்டில் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவன பஸ், பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். ஈரோடு ஈபிபி நகர் சூளைைய சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகன் கிஷோர் (19). தந்தையின் பிரிண்டிங் பட்டறையை கவனித்து வந்தார். இவரது நண்பரான ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த மாரிமுத்து மகன் தனுஷ் (19). பெருந்துறையில் தனியார் பொறியியல் கல்லூரில் படித்து வருகிறார். இந்நிலையில், கிஷோரும், தனுசும் பைக்கில் பெருந்துறையில் இருந்து ஈரோடு நோக்கி நேற்று வந்து கொண்டிருந்தனர்.
அதே ரோட்டில் இவர்களுக்கு முன்னால் தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது புதுப்பாளையம் பிரிவு அருகே அந்த பஸ் வலது புறம் திருப்பிய போது, பின்னால் வந்த பைக் பஸ்சின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கிஷோர், தனுஷ் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனுசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஈரோடு தாலுகா போலீசார், உயிரிழந்த கிஷோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.