ஈரோடு, செப். 15: நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். பெரும்பள்ளம் ஓடையின் குறுக்கே கீழ்பவானி கசிவு நீர் திட்டமான சூரம்பட்டி அணைக்கட்டானது கடந்த 1962ம் ஆண்டு கட்டப்பட்டது. அணைக்கட்டில் இருந்து 12 கி.மீ., தொலைவிற்கு வாய்க்கால் வெட்டப்பட்டு அதன் மூலம் பாசனம் நடந்து வருகிறது. இதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடைமடை பகுதியான நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உபரி நீர் காவிரியில் கலக்கிறது. ஆக்கிரமிப்பு காரணமாக வாய்க்காலில் பல ஆண்டுகளாக தண்ணீர் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் விவசாயிகள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில், கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பின்னர் தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு சூரம்பட்டி அணைக்கட்டு தூர்வாரப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.