திருவண்ணாமலையில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

சேலம், செப்.11:சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன் தலைமை வகித்தார். பொருளாளர் சுபாஷ், சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா, பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா வரும் 15ம் தேதி திருவண்ணாமலையில் நடக்கிறது. இதில் மத்திய மாவட்ட திமுக சார்பில், திரளான தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள செல்போன் ஆப்பை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் திமுக நிர்வாகிகள் முனைப்போடு ஈடுபட வேண்டும் என்று  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சூடாமணி, ராஜேந்திரன், வழக்கறிஞர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், அவைத்தலைவர் முருகன், நிர்வாகிகள் அண்ணாமலை, திருநாவுக்கரசு, லலிதா, கணேசன், பச்சியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடந்த இளைஞரணி ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் அறிவழகன் தலைமை வகித்தார். மாநகர அமைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில், மாநில இளைஞரணி துணை செயலாளர் துரை கலந்து கொண்டு, இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

Related Stories: