நாமகிரிப்பேட்டை, செப். 11: நாமகிரிப்பேட்டை வேளாண் கூட்டுறவு சங்கத்தில் நேற்று விவசாயிகள் கொண்டுவந்த 500 மூட்டை மஞ்சள் ₹15 லட்சத்துக்கு விற்பனையானது. நாமகிரிப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. நேற்றைய ஏலத்துக்கு நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, மங்களபுரம், புதுப்பட்டி, சீராப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் விரலி மஞ்சள் 360 மூட்டை, உருண்டை மஞ்சள் 130 மூட்டை, பனங்காளி மஞ்சள் 20 மூட்டை என 500 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த மஞ்சளை கொள்முதல் செய்ய ஆத்தூர், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹7,949க்கும், குறைந்தபட்சம் ₹6,455க்கும், உருண்டை மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹6,812க்கும், குறைந்தபட்சம் ₹5,402க்கும், பனங்காளி மஞ்சள் குவிண்டால் அதிகபட்சம் ₹11,645க்கும், குறைந்தபட்சம் ₹7,232க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 500 மூட்டை மஞ்சள் ₹15லட்சத்துக்கு விற்பனைஆனது.