×

காரிமங்கலம் அருகே கார் மீது டெம்போ மோதி பெண் பலி

காரிமங்கலம், செப்.11: காரிமங்கலம் அருகே, கார் மீது டெம்போ மோதிய விபத்தில் பெண் பலியானார். மேலும் குழந்தை உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நேத்ரா நகரை சேர்ந்தவர் கேசவராஜ்(64). இவரது மனைவி கற்பகம்(49). இவரது மகன் சஞ்சய்குமார்(32), இவரது மனைவி லட்சுமி (28). இவர்களுக்கு ஆதிரா தங்கம்(2) என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் நோக்கி காரில் நேற்று மதியம் வந்து கொண்டு இருந்தனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பிரிவு சாலையில் வந்த போது, எதிரே கிருஷ்ணகிரி நோக்கி டெம்போ ஒன்று சென்றது. எதிர்பாரத விதமாக சென்டர் மீடியன் மீது மோதிய டெம்போ, எதிரே வந்த கார் மீது மோதியது.

இதில் கேசவராஜின் மனைவி கற்பகம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், கேசவராஜ் மற்றும் காரை ஓட்டி வந்த சஞ்சய்குமார், லட்சுமி, குழந்தை ஆதிரா தங்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காரிமங்கலம் போலீசார், படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டெம்போ டிரைவரை தேடி வருகின்றனர். 

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா