×

கரூரில் மாணவ, மாணவியருக்கான அண்ணா பிறந்த நாள் விழா சைக்கிள் போட்டி 14ம் தேதி நடக்கிறது

கரூர், செப். 11: மாணவ மாணவியருக்கான அண்ணா பிறந்தநாள் விழா சைக்கிள்போட்டி வரும் 14ம் தேதி நடைபெறுகிறது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி மாணவ மாணவியர்களுக்கு வரும் 14ம் தேதி காலை 6 மணிக்கு துவங்கி கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.13 வயதிற்குள் மாணவர்களுக்கு 15 கிமீ, மாணவியர் 10 கிமீ, 15 வயதிற்குள் மாணவர்களுக்கு 20 கிமீ மாணவியர் 15 கிமீ, 17 வயதிற்குள் மாணவர்கள் 20 கிமீ, மாணவியர் 15 கிமீ,விதிமுறைகள்: மாணவ மாணவியர் தங்களது சொந்த செலவில் சாதாரண கைப்பிடி கொண்ட சைக்கிள் கொண்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். சாதாரண மிதிவண்டியாக இருத்தல் வேண்டும்.அகலமான கிராங்க் பொருத்தப்பட்ட மிதி வண்டிகளை பயன்படுத்தக்கூடாது. சைக்கிள் போட்டியின்போது நேரும் எதிர்பாராத விபத்துக்களுக்கு தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவியரே பொறுப்பு ஏற்க வேண்டும், போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

4 முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள், மாணவியர் தங்கள் பள்ளித் தலைமையாசிரியரிடம் இருந்து அவசியம் வயதுச் சான்றிதழ் பெற்று வர வேண்டும்.
வயதுச்சான்றிதழ் கொண்டு வராத மாணவ மாணவியர் கண்டிப்பாக போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். போட்டியில் கலந்து கொள்வோருக்கு பயணப்படி எதுவும் வழங்கப்பட மாட்டாது. போட்டிகளில் கலந்து கொள்ளும் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் பெயர் பட்டியலுடன் போட்டி நடைபெறும் இடத்தில் பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் சைக்கிள் போட்டியில் பெருமளவில் பங்கு பெற்று பயன்பெறுமாறு மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Anur Birthday Bicycle Competition ,Karur ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...