×

மகப்பேறு பிரிவில் படுக்கை பற்றாக்குறை அரசு மருத்துவமனையில் தரையில் படுத்து சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள்

திருவள்ளூர், செப். 11: திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில், போதிய படுக்கை வசதியில்லாததால், பிரசவத்திற்காக வரும் கர்ப்பிணிகளை தரையில் படுக்க வைக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில் உள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை. இங்கு, கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு பிரிவு இயங்கி வருகிறது. இதில், தினமும் 30 குழந்தைகள் வரை பிறக்கின்றன. 5 குழந்தைகள் இயல்பான பிரசவத்திலும், 25 குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாகவும் பிறக்கின்றன. தற்போது, பிரசவம் அதிகரித்து வரும் நிலையில், இங்கு அடிப்படை வசதிகள் இன்றி சிகிச்சைக்கு வரும் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

இங்குள்ள வார்டுகளில் 25க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதில், குழந்தை பிரசவித்த பெண்களை படுக்க வைக்கின்றனர். அவர்கள், குறைந்தபட்சம் 9 நாட்கள் வரை படுக்கையில் இருக்க வேண்டும். ஆனால், படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளதால், பிரசவ வார்டில் மட்டும் குழந்தை மற்றும் தாயை படுக்கையில் இருக்க அனுமதிக்கின்றனர். மற்றபடி பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகளை தரையில் படுக்குமாறு கூறுகின்றனர். ‘’டெலிவரி ஆனால்தான் பெட் வழங்கப்படும். அதுவரை தரையில்தான் படுக்க வேண்டும்’’ என கூறுகின்றனர். வார்டின் தரைப்பகுதி, சுகாதாரமற்ற முறையில் அமைந்துள்ளதுடன், அங்கு வழங்கப்படும் குடிநீரும் தூய்மையாக இல்லை. கழிப்பறையும் பராமரிப்பின்றி, துர்நாற்றம் வீசுகிறது. படுக்கைகளும் முறையாக பராமரிக்கப்படவில்லை.

இப்பிரச்னைகளால், பிரசவத்திற்கு வரும் பெண்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.இதுகுறித்து, சிகிச்சையில் உள்ள கர்ப்பிணி ஒருவர்
கூறுகையில், ‘’பிரசவத்திற்கு முன்பு வரை படுக்கை வசதி கொடுப்பதில்லை. தரையில்தான் படுக்க வேண்டும். பிரசவத்துக்கு பின்பு ஒருநாள் மட்டும் படுக்கை வசதி செய்து தரப்படுகிறது. அடுத்த, 5 நாட்கள் வரை தரையில் படுக்க வேண்டியுள்ளது. இடமும் சுகாதார வசதியின்றி உள்ளதால், தொற்றுநோய் பரவுகிறது. இதனால், அடிக்கடி மருத்துவரை வந்து சந்திக்கவேண்டிய நிலை உள்ளது. அடிப்படை வசதிகளும் சரியாக செய்து தருவதில்லை. எனவே, பிரசவ பெண்களின் நலன் கருதி, கூடுதல் படுக்கைகள் அமைத்து, இப்பிரிவை சுகாதாரத்தோடு பராமரிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

Tags : women ,ground ,hospital shortage ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது