×

விளையாட்டு விழாவில் தீயில் கருகி மாணவன் பலி செங்கல்பட்டு பள்ளி மீது அரசு கடும் நடவடிக்கை

செங்கல்பட்டு, செப். 11: விளையாட்டு விழாவில் மாணவன் பலியானது தொடர்பாக அரசு கடம் நடவடிக்கை எடுக்கும் என குழந்தைகள் நலக் குழு மாவட்டத் தலைவர் கூறினார். செங்கல்பட்டு கலைவாணர் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் விக்னேஷ் (16). செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் உள்ள ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். ராமகிருஷ்ணா பள்ளி குழுமத்தில் ஆண்கள், பெண்கள், மெட்ரிக்குலேஷன் பள்ளி விளையாட்டு விழாவில் நடந்த ஒலிம்பிக் தீப்பந்த நிகழ்ச்சியில் விக்னேஷ், பொட்ரோல் நிரப்பி தீ வைக்கப்பட்ட ஒலிம்பிக் தீப்பந்தத்தை ஏந்தி ஓடினார்.  அப்போது தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மருத்துவமனையிலும் பின்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்த அவர், 7 நாட்களுக்கு பின்பு இறந்தார்.

இதுதொடர்பாக மாணவனின் தந்தை முருகன், செங்கல்பட்டு டவுன் போலிசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், பள்ளி நிர்வாகத்திடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாவட்ட குழந்தைகள் நலக்குழும மாவட்டத் தலைவர் ராமச்சந்திரன், நேற்று மாணவன் விக்னேஷ் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம், விக்னேஷ் பள்ளிக்கு எந்த நேரத்தில் சென்றார். பள்ளி நிர்வாகம் எப்போது சம்பவம் குறித்து தகவல் கொடுத்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்தார்.

பின்னர், ராமகிருஷ்ணா பள்ளியில் விசாரிக்க சென்றார். அப்போது பள்ளி விடுமுறை விடப்படிருந்தது. இதுசம்பந்தமாக ராமச்சந்திரன் கூறுகையில், பள்ளி நிர்வாகியிடம் விசாரணை செய்ய உள்ளேன். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட போகிறேன். மாவட்ட கல்வி அலுவலர், முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளி நிர்வாகத்துக்கு விசாரணைக்கு வரும்படி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரிடமும் விசாரணை செய்து, தமிழக முதல்வர் மாவட்ட கலெக்டர், பள்ளிக்கல்வித் துறைக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அந்த அறிக்கையின் மீது அரசு, சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : school ,Chengalpattu ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி