இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் இளையரசனேந்தலில் நாளை நடத்த இருந்த மறியல் வாபஸ்

கோவில்பட்டி, செப்.11: இளையரசனேந்தலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாளை (12ம்தேதி) காலை 10 மணிக்கு இளையரசனேந்தல் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக சமாதான கூட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணிகண்டன் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட உதவி செயலாளர் சேதுராமலிங்கம், தாலுகா செயலாளர் பாபு, நக்கலமுத்தன்பட்டி கிளை செயலாளர் மாரியம்மாள், தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், பிள்ளையார்நத்தம் கிளை செயலாளர் தங்கம்பிள்ளை, இளையரசனேந்தல் செயலாளர் இன்னாசிமுத்து மற்றும் அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நக்கலமுத்தன்பட்டியில் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டி மானியம் பெறாதவர்கள் குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையம் மூலம் விசாரித்து ஒரு வாரத்திற்குள் மானியம் பெற்று தரவும், தெருவிளக்குகள் பராமரித்தல், பிள்ளையார்நத்தத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட புதிதாக அமைத்த போர்வெல்லுக்கு மின்இணைப்பு உடன் வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இளையரசனேந்தலில் உள்ள குயவன் ஊரணியில் ஆக்கிரமிப்புகளை 15 நாட்களில் அகற்றிடவும், இளையரசனேந்தலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட புதிய போர்வெல் அமைக்க ஊராட்சி ஒன்றிய ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்று கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நாளை (12ம்தேதி) நடத்த இருந்த சாலை மறியலை வாபஸ் பெற்றனர்.

Related Stories: