கோவில்பட்டி, செப்.11: இளையரசனேந்தலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்த இருந்த சாலை மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாளை (12ம்தேதி) காலை 10 மணிக்கு இளையரசனேந்தல் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக சமாதான கூட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மணிகண்டன் தலைமையில் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், நகர செயலாளர் சரோஜா, மாவட்ட உதவி செயலாளர் சேதுராமலிங்கம், தாலுகா செயலாளர் பாபு, நக்கலமுத்தன்பட்டி கிளை செயலாளர் மாரியம்மாள், தாலுகா செயலாளர் ராமகிருஷ்ணன், பிள்ளையார்நத்தம் கிளை செயலாளர் தங்கம்பிள்ளை, இளையரசனேந்தல் செயலாளர் இன்னாசிமுத்து மற்றும் அதிகாரிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.