ரவுடி சிந்தா சரவணன் கொலையில் முக்கிய குற்றவாளி மதுரை கோர்ட்டில் சரண்

தூத்துக்குடி, செப்.11: தூத்துக்குடியில் பிரபல ரவுடி சிந்தா சரவணன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முனியசாமி மதுரை கோர்ட்டில் சரணடைந்தார். தூத்துக்குடி கேவிகே.நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி சிந்தா சரவணன்(36). இவர் மீது கொலை வழக்குகள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரவணனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாராஜன்(30), ஜான்சன்(43), அரிகிருஷ்ணன்(46), தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த வாழ்வாங்கி மகன் வடிவேல்(37), கார்த்திக்பாலா(39), முத்துக்குமார்(32), மொட்டைசாமி(25) மற்றும் மதுரை சட்டக்கல்லூரி மாணவர் செல்வசதீஷ்(24) ஆகியோரை கைது செய்திருந்தனர்.

மேலும் வடிவேல்(39) பாலசிங்(38) ஆகிய இருவரும் சிவகாசி கோர்ட்டில் சரணடைந்தனர். முக்கிய குற்றவாளியான தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முனியசாமி(32) என்பவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று மதுரை ஜேஎம் எண் 1 கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அவரை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்த மத்தியபாகம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: