வில்லியனூர், செப். 11: புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துத்திப்பட்டு பகுதியில் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆலை இயங்கி வருகிறது. டெல்லியை சேர்ந்த சவுரவ் தபாஸ் என்பவர் ஆலையை நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும், சட்டவிரோதமாக ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் எடுப்பதாகவும், கழிவுநீரால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு புகார் அனுப்பினர். அதன்பேரில் அமைச்சர் கந்தசாமி, தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான், தொழிலாளர் நலத்துறை ஆணையர் வல்லவன் ஆகியோர் நேற்று காலை சம்பந்தப்பட்ட ஆலையை பார்வையிட்டனர்.அப்போது கம்பெனியில் முந்திரி எண்ணெய் தயாரிப்பது குறித்தும், கம்பெனியை சுற்றி கழிவு நீர் தேங்குவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 2 ஆழ்குழாய் கிணறு இருப்பது குறித்தும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் கழிவுநீர் வெளியேற்றப்படுவது குறித்தும், உரிமம் புதுப்பிட்டுள்ளதா எனவும் ஆய்வு நடத்தினர். இதை தொடர்ந்து அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறுகையில், இங்கு சுற்றுச்சூழல் மாசுபடும் வகையில் கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். அனுமதி இன்றி ஆழ்குழாய்கள் அமைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கம்பெனியின் கிளை சேதராப்பட்டில் உள்ளது. இதேபோல் அங்கும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் கடந்த 10 ஆண்டுகளாக லைசென்சை புதுப்பிக்காமல் இருப்பதும், மின்துறைக்கு மின்கட்டணம் செலுத்தாததும் தெரியவந்தது. இதனால் அந்த கம்பெனியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கவும் முடிவு செய்திருக்கிறோம், என்றார்.