×

வேன் கவிழ்ந்து 24 பேர் படுகாயம்

கடலூர், செப். 11: கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு சஞ்சீவிராயன் கோயிலில், திருமணத்தை முன்னிட்டு நடத்தப்படும் நலுங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க புவனகிரி வட்டம் வேலங்கிப்பட்டு கிராமத்திலிருந்து சுமார் 30 பேர் வேன் மூலம் நேற்று மதியம் புறப்பட்டனர். ஆலப்பாக்கத்தில் இருந்து குள்ளஞ்சாவடி செல்லும் சாலை வழியாக வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எல்லுக்கால்வாய்க்கால் அருகே எதிர்பாராதவிதமாக பின்பக்க டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் வேலங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகுவேல் மகள் தீபிகா(4), சேட்டு மகன் முரளி(32), காத்தமுத்து மனைவி மகேஸ்வரி(37), ராமானுஜன் மகன் ஐயப்பன்(35), மணிமாறன் மனைவி பாஞ்சாலி(44), செங்கல்வராயன் மனைவி அமராவதி(60), சதீஷ்குமார் மனைவி சுசிலா(34), பாண்டியன் மனைவி சரோஜா(27) உள்பட 24 பேர் காயம் அடைந்தனர். அனைவரும் கடலூர்  தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதில் ஒருவர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.

Tags : Van ,
× RELATED சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!