சேத்தியாத்தோப்பு, செப். 11:கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது அள்ளூர் அரசு நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியானது கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்நிலையில் இப்பள்ளிக்கு சரியான மழைநீர் வடிகால் வசதி இல்லாமல்போனதால் மழைக்காலங்களில் இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் என பலரும் வேதனையடைந்து வந்தனர். இதுகுறித்து புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ துரை.கி.சரவணனிடம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.
உடனடியாக கோரிக்கையை ஏற்ற சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 லட்சத்தில் அள்ளூர் அரசு பள்ளிக்கு மழைநீர் வடிகால் வசதிக்கான கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கினார். அதன்படி வடிகால் கால்வாய் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த மழைநீர் வடிகால் கால்வாய் பணியால் இனிவரும் காலங்களில் அள்ளூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு எவ்விதமான இடையூறும்இருக்காது என இப்பணியை மேற்கொண்டு வரும் ஊராட்சி செயலர் அள்ளூர் சம்பத் தெரிவித்தார்.