நெற்பயிர்களை தாக்கும் பாக்டீரியா இலைகருகல் நோய் கட்டுப்படுத்தும் வழிமுறை

ஒரத்தநாடு, செப். 11: நெற்பயிரை தாக்கும் பாக்டீரியா இலைகருகல் நோய் கட்டுப்படுத்து் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.ஈச்சங்கோட்டை அரசு வேளாண்மை ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜேந்திரன் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டத்தில கடந்த 2 வாரங்களாக பெய்து வரும் மழை மற்றும் மேகமூட்ட கால நிலையால் நெற்பயிர்களில் பாக்டீரியா இலைகருகல் நோய் தாக்குதல் அறிகுறி தெரிகிறது. இதை கருத்தில் கொண்டு வேளாண் ஆராய்ச்சி நிலைய பயிர் பாதுகாப்பு முறைகளை செய்ய வேண்டும். இத்தகைய பாக்டீரியா நாற்றங்காலில் நாற்றுகளை தாக்குவதுடன் நடவு வயலில் வளர்ச்சியுறும் நெற்பயிரையும் தாக்குகிறது. அதிக ஈரப்பதம் தொடர்ந்து பல நாட்களாக இருக்கும்போது இந்நோய் வேகமாக பரவி நெற்பயிரை தாக்கி சேதப்படுத்துகிறது. இந்நோய் விதை, தண்ணீர மற்றும் மண் மூலமாகவும் பரவுகிறது. மழைநீர் அதிகமாக தேங்குவதாலும், அதிகளவு தழைச்சத்து இடுவதாலும், நாற்றுகளை கிள்ளி நடுவதாலும் இந்த நோய் பரவும் சூழல் அமைகிறது. நெற்பயிர் இல்லாத காலங்களில் களை செடிகளான லீசியா ஹெக்சாண்ட்ரா, குதிரைவாலி, எருமைபுல் ஆகியவைகளையும் இந்நோய் தாக்குகிறது. நெற்செடியின் அடிமட்டத்தில் உள்ள இலைகளின் ஓரங்களில் நீர் கோர்வையுடன், உருண்டை வடிவில் உள்ள புள்ளிகள் தோன்றும். இந்த புள்ளிகள் நீண்டு அகலமாகி பெரிதாக வளரும். இதன் ஓரங்கள் அலை போன்ற அமைப்பு இருக்கும். பின் மஞ்சளாக மாறி முடிவில் காய்ந்து விடும். இலைகள் முற்றிலுமாக காய்ந்து கருகியவுடன் அந்த இலைகளின்மேல் சாறுண்ணி பூசணங்கள் வளருவதால் இலைகள் சாம்பல் நிறத்துடன் காணப்படும். இலையின் ஆரோக்கியமான பாகத்தின் பக்கத்தில் நீர்கோர்வை ஏற்படும். இதன் பக்கத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டால் உடனடியாக அதன்மூலம் இந்நோய் தாக்கி புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். பின் இலைகள் முழுபரப்பில் பரவி விடும். இலையின் மேல்பாகத்தில் இளம் புள்ளிகளில் பால்போன்ற ஒளிபுக முடியாத பனிதுளிகளில் அதிகாலையில் பாக்டீரியா நோய் கிருமிகளை காணலாம்.

இதை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு ரகங்களை பயிர் செய்ய வேண்டும். நோய் தாக்கிய வயல்களில் மேல் உரங்களை இடாமல் இருப்பது நன்மை தரும். நோய் தாக்கப்பட்ட வயலில் இருந்து தண்ணீரை நோய் தாக்காத வயலுக்கு பாய்ச்சக்கூடாது. நோய் அறிகுறி தெரிந்தவுடன் பசும் சாணத்தை வேளாண்துறை அலுவலர்கள் பரிந்துரைப்படி கரைசலாக்கி கைத்தெளிப்பான் மூலம் தெளித்து இலை வழியாக இந்நோயை கட்டுப்படுத்தலாம். கூடுதலான பாதிப்பு ஏற்படும்போது செப்ரோமைசின், சல்பேட், டெட்ராமைசின், காப்பர் ஆக்சிகுளோரைடு ஆகிய மருந்துகளை ஒட்டும் திரவத்துடன் கலந்து வேளாண் அலுவலர்களின் பரிந்துரைப்படி தெளித்து கட்டுப்படுத்தலாம். இவ்வாறு ஈச்சங்கோட்டை அரசு வேளாண்மை ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: